களக்காடு, ஏப்.8: நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. விழாவின் 5ம் நாளான 31ம் தேதி நள்ளிரவில் 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் வைபவமும், 10ம் திருநாளான ஏப்.5ம்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும் நடந்தது. தொடர்ந்து 11ம் திருநாளான நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடந்தது. இதனை முன்னிட்டு நம்பியாற்றில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார, தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். இரவில் நம்பி சுவாமிகள் ஸப்தாவர்ணம் வெற்றிவேர் சப்பரத்தில் பவனி வந்தார்.